தீமை செய்யும் சீமை மரம்
வெளிநாட்டுக்காரர்கள் வேண்டாம் என ஒதுக்கியதை எல்லாம் நாம் பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கிறோம். அந்த வரிசையில் அமெரிக்காவில் விஷ தாவரங்களின் பட்டியலில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நாம் வளர்த்து கொண்டிருக்கிறோம். இதன் பூர்வீகம் மெக்சிகோ. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி, 1870ல் இந்தியாவில் முதன் முதலாக மகாராஷ்ட்ராவில் வேரூன்ற தொடங்கியது. 1950ல் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விறகு, வேலி, அடுப்பு கரி போன்ற அற்ப தேவைகளுக்காக இறக்குமதி செய்து வளர்க்கப்படும் இம்மரம் நம் மண்ணில் நஞ்சை பரவ செய்து பெரும் பாரமாகவே இருக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு எதிரி :
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இதன் வேர் 175 அடி வரை பூமியை துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கண்டுபிடிக்கப்பட்டது. பறவைகளுக்கு தேவையான பழங்களோ, குளிர்ச்சியோ, அடர்த்தியான கிளைகளோ இல்லை. மேலும் கூர்மையான முட்கள் அதிகம் இருப்பதால் பறவைகள் கூடு கட்டுவதில்லை. நீர் நிலைகளில் வளரும் இம்மரங்களின் முட்களில் சிக்கி நீர்வாழ் உயிரினங்கள் இறந்து விடுகின்றன.
விவசாயம் பாதிப்பு :
பருவ மழை பொய்த்ததால் ஆற்றுப் பாசனம் தடைபட்டு, வேளாண் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயம் செய்யப்படாத விளை நிலங்களை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதன் சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் போக விடாமல் தடுப்பதால், நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் இம்மரங்களின் இலை உதிர்வதால் அந்த நீர் மஞ்சள் நிறமாக மாறி விஷமாகிவிடுகிறது. எனவே நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காலப்போக்கில் நமது நீர் ஆதரங்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சீமை, நாட்டு கருவேலம் வேறுபாடு :
நமது நாட்டு கருவேல மரங்கள் உயர்ந்து வளரக் கூடியவை, மழை நீரை பூமிக்குள் இறங்குவதை தடுக்காத ஆணிவேர்களை கொண்டது. தோற்றத்தில் வைரம் பாய்ந்த உறுதியுடன் கறுப்பாக இருக்கும். வேளாண் தொழிலுக்கு தேவையான ஏர்க் கலப்பை, கத்தி, கோடாரி, மாட்டு வண்டிகள் செய்ய பயன்படுகிறது. 'ஆலும், வேலும் பல்லுக்குறுதி' என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டது நம்மூர் கருவேல மரத்தின் குச்சிகளைத்தான்! சீமைக்கருவேல மரம் வறண்ட பூமியிலும் வேர்பிடித்து 12 மீட்டர் வரை உயரமாக தடித்து வளரக் கூடியது. இதை அடையாளம் கண்டு இம்மரங்களை முற்றிலுமாக அழித்து நமது நாட்டிற்கே உரிய நாட்டு கருவேல மரங்களை வளர்க்க வேண்டும்
No comments:
Post a Comment